2வது முறை லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக சென்னை வண்டலூரைச் சேர்ந்த கே.என்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் , அம்பத்தூர், மதுரவாயல் (திருவள்ளூர் மாவட்டம்) ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த 6 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில், வரவிருக்கும் லோக்சபா தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சென்னை வண்டலூரைச் சேர்ந்த 59 வயது கே.என். ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ. அரசியல் பொருளாதார பட்டதாரியான இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக அவைத் தலைவராக உள்ளார்.
கடந்த 2004 ம் ஆண்டு செங்கல்பட்டு லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான பாமகவைச் சேர்ந்த ஏ.கே. மூர்த்தியிடம் தோல்வியைத் தழுவிய ராமச்சந்திரனுக்கு, 2009-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தற்போது இவர் 2-ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.