பெருமாள் முருகனுக்கு விருது தரக் கூடாது.. இது கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் "சகிப்புத்தன்மை"
திருப்பூர்: நாடெல்லாம் சகிப்புத்தன்மைக்கு எதிரான போக்கைக் கண்டித்து எழுத்தாளர்கள், படைப்பாளிகள் தங்களது விருதுகளைத் திருப்பித் தந்து வரும் நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு விருதே தரக் கூடாது என்று கொங்குநாடு ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது படைப்பாளிகளை அதிர வைத்துள்ளது.
விருதே தரக் கூடாது என்று இந்த ஜாதிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் சகிப்புத்தன்மையின் அடித்தளத்தையே இக்கட்சி தகர்க்க முனைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்தில் இக்கட்சியின் கூட்டம் நடந்தது. அதில் ஒரு தீர்மானம் போடப்பட்டது. அதில் கூறப்படடுள்ளதாவது...
கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற ஸ்தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் விதத்திலும், அக்கோயிலின் இலட்சக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும்,தமிழர் பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் புத்தகம் எழுதிய பெருமாள் முருகனுக்கு வழங்கப்படவுள்ள இந்தியமொழி இலக்கியங்களுக்கான சமன்வய பாஷை சம்மன் விருதை ரத்துசெய்ய வேண்டும். மாதொரு பாகன் புத்தகத்தை தடைசெய்ய வேண்டும்.
மதுவின் தீமைகளை பாடலாக பார்ப்போர் கலங்கும் வண்ணம் பாடல் மூலமாக வெளிப்படுத்திய பாடலாசிரியர் கோவனனை, தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு, லட்சக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் புத்தகம் எழுதிய மாதொரு பாகன் புத்தக ஆசிரியர் பெருமாள் முருகனுக்கு பரிசு வழங்கி, பாராட்டு பத்திரம் (இந்திய மொழிகளுக்கான விழா) வழங்குவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? எனவே இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பாக கடிதம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.