'கொலை வெறி'யில் கொ.ம.தே.க... கேட்டது கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டி என மிரட்டல்!
கோவை: பாஜக கூட்டணியில் தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடப் போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாஜக தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழக லோக்சபா தேர்தல் கூட்டணியில் பாமக, மதிமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

வெளியிலிருந்து பார்க்க மகா பலமான கூட்டணி போல இது தோன்றினாலும் உள்ளுக்குள் ஒரே குப்பாச்சு குழப்பாச்சு கதையாக இருக்கிறது. எந்தத் தலைவரும் இணக்கமாக பேசவில்லை, இறங்கி வர வில்லை, விட்டுக் கொடுக்கவும் முன்வரவில்லை. இதனால் தொகுதிப் பங்கீடு பெரும் சிக்காலகிப் போனது.
பெயருக்கு ஒரு கூட்டணி என்று வேண்டும் என்பதற்காகவே இவர்கள் எல்லோரும் இணைந்து நிற்பதாகவே தெரிகிறது. கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை தாங்குகிறது, எல்லோரும் கை கோர்த்து பிரசாரம் செய்வார்களா, பேசுவார்களா என்பதையும் கூட இவர்களால் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் எல்லோருக்கும் ஒரு வழியாக பாஜக தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்,கொங்குதநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு புதுப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் தரப்பில் கூறுகையில், நாங்கள் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டோம்.
ஆனால் அவர்கள் திருப்பூரை மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். எனவே அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கோவையில் கூட்டினர். அதில் தீர்மானம் ஒன்றைப் போட்டனர். அத்தீர்மானத்தில், கொ.ம.தே.க. விரும்பி கேட்ட தொகுதிகளை ஒதுக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும். கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை பலத்தை நிருபிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பிரியலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications