கொடநாடு கொலை: உண்மையை கக்கும் இருவர்... அதிமுக மாஜி அமைச்சருக்கு சிக்கல்!
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் மாஜி அமைச்சர் சிக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், மாஜி அமைச்சர்கள், அதிமுக விஐபிக்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொடநாட்டில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மர்ம கும்பல், 10ஆம் எண் கேட்டில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொன்றுவிட்டு ஆவணங்களைக் கொள்ளையடித்து சென்று விட்டது.
இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவரது நண்பர் சயன் விபத்தில் சிக்கி கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடநாடு கொலை
இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக பலரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் கோவை சிறையில் அடைத்துள்ளனர். அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்ட மேலும் இருவர் தலைமறைவாகினர். இதைத் தொடர்ந்து அந்த இருவரில் ஒருவரை போலீஸார் நேற்று கேரளாவில் கைது செய்தனர்.
பலர் கைது
கேரள மாநிலம் வலையாறு பகுதியில் தங்கியிருந்திருக்கிறார் மனோஜ் சாமி. இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளிகளில் இவரும் ஒருவர். இவர் வலையாறு பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைக்க, அவரை நேற்று கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் யாருக்கு இதில் தொடர்பு என்ற உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற
சஜீவன் மறுப்பு
இந்த கொலை, கொள்ளை சம்பவத்துகு கூடலூர், கோவையில் மரக்கடை வைத்துள்ள சஜீவன் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. முன்னாள் அமைச்சருடன் நெருங்கி தொடர்பில் இருந்த இவர், யாருடைய அனுமதியும் இன்று கொடநாடு பங்களாவுக்கு சென்று வருவார் என்பதாலும் கனகராஜ், சயனுடன் தொடர்பில் இருந்தவர் என்பதாலும் சந்தேகம் எழுந்தது. ஆனால் கொலைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் சஜீவன். யாருக்கு தொடர்பு என்று போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சஜீவன்.
செல்போனில் சிக்கிய மாஜி அமைச்சர்
கேரளாவில் பிடிபட்ட ஜிதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, முன்னாள் அமைச்சர் ஒருவர் இவர்களிடம் பேசியது தெரிய வந்தது. முன்னாள் அமைச்சரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது ஏன் என்று அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
மாஜி அமைச்சருடன் தொடர்பு
கொடநாடு பங்களாவில் ஜிதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் ஆரம்பத்தில் பர்னிச்சர் வேலைகளை செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் அந்த முன்னாள் அமைச்சரின் சிபாரிசின்பேரில் கொடநாடு பங்களாவில் வேலை பார்த்தனர். கொடநாடு காவலாளியை கொன்று கொள்ளை அடிப்பதற்கு முன்பு இரவில் இந்த கும்பல் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
சோதனை சாவடியில் சிக்கினர்
கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்து கொள்ளையடித்த பிறகு 11 பேர் கும்பல் காரில் தப்பி சென்றுள்ளனர். அப்போது வயநாடு செல்லும் வழியில் கூடலூர் சோதனை சாவடியில் கும்பல் சென்ற காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்தனர். இதில் காரின் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் மாட்டி கொண்டனர்.
விடுவித்த அமைச்சர்
அந்த சமயத்தில் ஜிதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர், எங்களுக்கு முன்னாள் அமைச்சரை தெரியும் என்று கூறி செல்போனில் பேசி உள்ளனர். அப்போது போனில் பேசிய முன்னாள் அமைச்சரும், போலீசாரிடம், இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான், காரை விடுங்கள் என்று கூறினாராம். இந்த தகவல் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முக்கிய குற்றவாளி யார்?
கொடநாடு கொலை, கொள்ளை குறித்து எதுவும் அறியாத நிலையில் மாஜி அமைச்சர் இவர்களுக்கு உதவி செய்தாரா? அல்லது வேறெதுவும் பின்னணி இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் மர்ம திரைப்படம் போல நகர்ந்து வருகிறது. இதுவரை அம்புகள் மட்டுமே சிக்கியுள்ளன. எய்தவன் யார் என்பதை போலீசார் கண்டு பிடிப்பார்களா?