ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் படுகொலை.. 7 வாகனங்களில் சென்று போலீசார் அதிரடி சோதனை.. தடயங்கள் சிக்குமா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற படுகொலை தொடர்பாக 7 வாகனங்களில் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று கொடநாட்டில் 7 வாகனங்களில் சென்ற போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 24-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிஷனிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
சிசிடிவி கேமரா
கோத்தகிரியில் உள்ள எஸ்டேட்டில் சுற்றித் திரிந்த கார்கள் குறித்து அங்குள்ள சோதனை சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
மாஜி கார் டிரைவர் பலி
இதனிடையே, ஜெயலலிதா மாஜி கார் ஓட்னநர் கனகராஜ் சாலை விபத்து ஒன்றில் திடீரென மரணமடைந்தார். இந்தக் கொலையில் தேடப்பட்டு வந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா கூறியுள்ளார்.
சோதனை
இதனைத் தொடர்ந்து, இன்று 7 வாகனங்களில் கொடநாடு எஸ்டேட் சென்றுள்ள போலீசார், கொலை தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் கொலை தொடர்பான முக்கிய தடயங்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.