உண்மைகள் வெளிவரும்..'கொம்பன்' தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்: கிருஷ்ணசாமி
சென்னை: கொம்பன் பட பிரச்சினைக்காக என்மீது பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில், முத்தய்யா இயக்கத்தில், கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படத்தில், குறிப்பிட்ட ஜாதிகளை சீண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார் கிருஷ்ணசாமி.
இதையடுத்து கோர்ட் பரிந்துரைபேரில் சில காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு வந்த கொம்பன் படத்தில், ஜாதிய சீண்டல்கள் காட்சிகள் எதுவும் இல்லை.

இதனிடையே, தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய, கிருஷ்ணசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், கிருஷ்ணசாமி இதுகுறித்து கூறியதாவது: கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 87 காட்சிகளை கட் செய்த பிறகு படம் வெளியிடப்பட்டது எனது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தால் ஜாதிய சீண்டல் இருந்திருக்கும்.
எப்போதெல்லாம், குறிப்பிட்ட ஜாதியை தூக்கிபிடித்து, வீரர்களாக காட்டி படங்கள் வருகிறதோ, அப்போது அந்த ஜாதியினரின் தாக்குதலுக்கும், வீரத்தை காண்பிக்கும் இடமாகவும் மாறுவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவு மக்கள்தான்.
என்மீது ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராகவே உள்ளேன். அப்போதுதான் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் இருப்பதால், கூடுதல் விவரங்களை கூற முடியாது. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications