அமைச்சர் பதவி தர மறுப்பு! எடப்பாடி அரசுக்கு எதிராக போராட கொங்கு எம்எல்ஏக்கள் முடிவு!
அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக போராடும் முடிவில் கொங்கு எம்.எல்.ஏக்கள் உள்ளனராம்.
சென்னை: அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் கொங்கு எம்.எல்.ஏக்கள் தொகுதி பிரச்சனையை முன்வைத்து வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி குடைச்சல் கொடுக்கும் முடிவில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டு, தினகரன் குடும்பத்தை வளைய வருகின்றனர் எம்.எல்.ஏக்கள் வெற்றிவேலுவும் தங்க.தமிழ்ச்செல்வனும். கூவத்தூர் வாக்குறுதியின்படி, ஒருமுறையாவது அமைச்சர் பதவி தேடி வரும் என்ற நம்பிக்கையில் தென்மாவட்ட எம்.எல்.ஏக்கள் வலம் வந்தனர்.
பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன், இன்பதுரை என அமைச்சர் கனவில் உள்ளவர்கள் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும், எடப்பாடி மீதான எரிச்சலில் கொங்கு மண்டல பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

எடப்பாடிக்கு எதிராக.
முதலில் எப்படியாவது எடப்பாடியை பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரனோடு கை கோர்த்தனர். இதுகுறித்து எந்தவித விளைவும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இல்லாததால், நேரடியாக எடப்பாடியை சந்தித்தனர்.

எச்சரிக்கை
இந்த சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி, அமைச்சர் பதவி வேண்டும் என்றாலும் நான் மனது வைத்தால்தான் முடியும். நீங்களாக கற்பனை செய்து கொண்டு, எதிர் அணியோடு கை குலுக்கினால் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் மனது வைத்தால்தான் பதவி கிடைக்கும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவி கனவை மாற்றிக் கொண்டனர் சிலர்.

என்னுடைய அரசு என்கிறார்
இருந்தபோதும் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் குமுறிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏக்களோ, சசிகலா இருந்தவரையில், அனைத்துக்கும் தலையாட்டியவர் எடப்பாடி. இப்போது அடியோடு மாறிவிட்டார். என்னுடைய அரசு என்பதை நிறுவும் வேலைகளில் ஆர்வம் காட்டுகிறார்.

மாஜி அமைச்சர்கள்
அரசுக் கட்டடம் திறப்பதற்கு முன்பே எடப்பாடியின் புகைப்படத்தை திறந்துவிடுகின்றனர். எங்களுடைய கேள்வியெல்லாம், ஏற்கெனவே அமைச்சர்கள் இருந்தவர்கள் பலர், தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ளனர். சசிகலா குடும்பத்தால்தான், அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கவில்லை.

கார்டனுக்கு கப்பம் இல்லை
எடப்பாடி மீண்டும் முதல்வரான பிறகு, நல்ல வலுவான துறையைக் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள், நாங்கள் மீண்டும் பதவிக்கு வருவதையே விரும்பவில்லை. ஒரு அமைச்சரே நான்கைந்து துறைகளை வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார். கார்டனுக்குக் கப்பம் கட்ட வேண்டிய சூழல் இல்லாததால், அனைத்தும் அமைச்சர்களுக்கே சென்று சேருகிறது.

நிறைய துறைகள்
அமைச்சர் பதவி கேட்ட எம்.எல்.ஏக்களையும் அவர்கள் வெறுப்புடன் அணுகுகின்றனர். இதனாலேயே, பல மாவட்டங்களில் அமைச்சர்களுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கின்றனர் எம்.எல்.ஏக்கள். எடப்பாடியிடம் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் கூடுதலாக இருக்கின்றன. ஜெயக்குமாரிடம் நிதித்துறையோடு மீன்வளமும் இருக்கிறது.

இழுத்தடிப்பு
வேலுமணியிடம் உள்ளாட்சியோடு, நகர்ப்புற வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட துறைகள் இருக்கின்றன. செங்கோட்டையனிடம் இருக்கும் விளையாட்டுத்துறையை வேறு யாருக்காவது கொடுக்கலாம். எடப்பாடியிடம் இருக்கும் துறைகளை இரண்டு பேருக்குப் பிரித்துக் கொடுக்கலாம். இதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைக் கையில் வைத்திருப்பவர்கள் அதிகம். பதவியைக் கேட்டுச் சென்றாலும், ஜனாதிபதி தேர்தல் முடியட்டும் எனக் கூறினார்கள். இப்போது சென்றால், கேபினட் மாற்றத்தை விரைவில் அறிவிக்கிறோம் என்கிறார்கள்.

போராட்டம்தான் வழி
யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்காமல், கல்லா கட்டுவதுதான் அமைச்சர்களின் நோக்கம். இதைப் புரிந்து கொண்டுதான், சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தார் தோப்பு வெங்கடாச்சலம். இனியும் பதவி கொடுப்பதைக் காலதாமதம் செய்தால், தொகுதிப் பிரச்னையைக் காரணம் காட்டி அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவும் தயாராகத்தான் இருக்கிறோம் என்கிறார்.












Click it and Unblock the Notifications