ஹைட்ரோகார்பன் குழாய்களை மத்திய அரசு மூடும் வரை போராடுவோம் - கோட்டைக்காடு மக்கள்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று கோட்டைக்காடு போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து குழாய்களை மூடும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக கோட்டைக்காடு கிராம மக்கள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் நெடுவாசலில் போராட்டத்தை தொடருவதா? முடித்துக்கொள்வதா என்று நெடுவாசல் கிராம மக்கள் இரவு அறிவிக்க உள்ளனர்.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

இதே போன்று நெடுவாசல் அருகில் உள்ள கோட்டைக்காடு பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர்களது கிராமத்தில் மண்ணெண்ணெய் திட்டம் என்று தொடங்கப்பட்டதை எதிர்த்தும் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், நிலத்தில் நீர் சுத்தமாக வற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று நெடுவாசல், கோட்டைக்காடு கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு போராட்டக்குழுவினரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து காலையில் இருந்து போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். வாய்மொழி உத்தரவை ஏற்க மாட்டோம் என்றும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்க கிராம மக்கள் மறுத்து விட்டனர். அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும், ஆழ்துளை குழாய் கிணறுகளை மூடினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கோட்டைக்காடு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தைத் தொடருவோம் என்றும் அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
இதனிடையே நெடுவாசல் போராட்டத்தை தொடர்வதா, அல்லது கைவிடுவதா என்று இன்று இரவுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று போராட்டக்குழுவை சேர்ந்த வேலு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட எங்களுக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications