கலங்கடிக்கும் நிலவரம்.. 6 லட்சம் கடனுக்கு 3 கோடி கந்து வட்டி! கோவில்பட்டி பெண்ணின் பரபரப்பு வீடியோ
கோவில்பட்டி: 6 லட்சம் கடனுக்கு கந்து வட்டியால் 3 கோடியை இழந்ததாக, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி பிரவீனா (30).
கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா, கடம்பூரில் உள்ள தனது தந்தை நாராயணன் வீட்டில் இருந்து வருகிறார்.
ரெட் லைட் போட்டதும்.. இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவிற்காக சாலையில் ஆடிய பெண்- கடைசியில் இப்படியா நடக்கணும்!
பழைய வாகன தொழில்
பிரவீனா தொடக்கத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் சேர்ந்து பழைய வாகனங்கள் வாங்குவது, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ம் ஆண்டு கயத்தாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முருகன் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். முதலில் 6 பைசா வட்டி கொடுத்து வந்துள்ளார். பின்னர் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கும் வட்டி கொடுத்து வந்த நிலையில் பிரவீனா சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த முருகன், 6 பைசா வட்டியை 10 பைசா வட்டியாக கொடுக்க வற்புறுத்தியுள்ளார்.
வட்டிக்கு வட்டி
வேறு வழியல்லாமல் பிரவீனா கூடுதலாக வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தொழிலில் முடக்கம் ஏற்பட, பிரவீனா வட்டி கொடுக்க முடியமால் பரிதவிக்க, முருகன் வேறு ஒரு நபரை கை காட்டி, அவரிடம் பணம் பெற்று தனது வட்டியை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பிரவீனா அவர் கூறிய நபரிடம் வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் மற்றொருவரிடம் பணத்தை வாங்கி, இவருக்கு வட்டி கொடுத்துள்ளார். இப்படி ஒருவரிடம் பணம் வாங்கி மற்றொவருக்கு அடைக்க என, 48 பேரிடம் இது போன்று வட்டிக்கு பணம் வாங்கி வட்டியை அடைத்துள்ளார் பிரவீனா.
நகை, சொத்துக்கள்
நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணம் கொடுத்தவர்கள் பிரவீனாவிடம் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். வெளியில் சொன்னால் தங்களுக்கு அவமானம் ஏற்படுவது மட்டுமின்றி, வட்டிக்கு கொடுத்தவர்கள் தங்களை ஏதாவது செய்து விடுவர்களோ என்ற அச்சத்தில் வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்து வந்த பிரவீனா, வேறு வழியில்லாமல் தனது நகை, தனது தாயின் நகையை விற்பனை செய்தும், தனது தந்தையின் சேமிப்பு பணம் 20 லட்சம், தனது சகோதரனின் 19 லட்ச ரூபாய் ஆகியவற்றையும் வட்டிக்காக கொடுத்துள்ளார். மேலும் 10 சென்ட் நிலத்தினையும் வட்டிக்கு பணம் கட்டி இழந்துள்ளார். இப்படி 6 லட்ச ரூபாய்க்காக 3 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியது மட்டுமின்றி, சிலரின் கடனையும் அடைத்துள்ளனர்.
மிரட்டல்கள்
வாங்கிய முதலுக்கு மேல் பலமடங்கு பணம் வட்டியாக கொடுத்த பிறகும், அதில் 18 பேர் தொடர்ந்து பிரவீனாவை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிலரும் பிரவீனாவிற்கு கடன் கொடுத்துள்ளதால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரவீனா கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோரிடம் புகார் மனு அளிக்க, இது குறித்து உடனடியாக நடவடிக்கை கடம்பூர் காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையெடுத்து கடம்பூர் காவல் நிலையத்தில் பிரவீனாவிடம் புகார் பெற்று பிரவீனாவை மிரட்டிய முருகன், மகாராஜா, கிருஷ்ணம்மாள், குருவம்மாள், செல்வராணி, செல்வி, சிவசக்திராமன், சிவசக்தி,ராஜா, கங்கா, ராஜேஸ் கண்ணா, தேன்ராஜா, ராம்குமார், ராஜா ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உருக்கமான வீடியோ
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பிரவீனா சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் வாங்கிய ஆறு லட்ச ரூபாய் கடனுக்கு மூன்று கோடி ரூபாய் வரை கட்டியுள்ளதாகவும் தொடர்ந்து இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இருந்தாலும் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்து விதமாக அவர்கள் மிரட்டுவதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மேலும் தமிழக அரசு இந்த கந்து வட்டியை அறவே ஒழிக்க வேண்டும் எனவும் அந்த வீடியோவில் பிரவீனா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.