மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக கலகக் குரல்- கேபி முனுசாமிக்கு அதிமுகவில் பெருகும் ஆதரவு!
மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ள கேபி முனுசாமிக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது.
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கொண்டாடும் மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கேபி முனுசாமிக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை பாதுகாத்தவர்கள் நாங்கள்தான் என மன்னார்குடி திவாகரன் தஞ்சை நிகழ்ச்சியில் பேசினார். இதை ஆமோதிக்கும் வகையில் சசிகலா கணவர் நடராஜன், நாங்கள்தான் அதிமுகவை காப்பாற்றினோம். நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என்றெல்லாம் அலட்டினார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். திவாகரன், நடராஜன் ஆகியோர் மீது அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
சசிகலாவை தவிர்த்துவிட்டு மன்னார்குடி கோஷ்டியை மட்டும் எதிர்க்கும் கே.பி. முனுசாமியின் வியூகத்துக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அதிர்ந்து போன மன்னார்குடி தரப்பு அமைச்சர்களை முனுசாமியிடம் தூது அனுப்பி பார்த்தது. ஆனால் முனுசாமியோ அவர்களை விரட்டியடித்துவிட்டார்.

தற்போது கே.பி. முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் கேபி முனுசாமிக்கு அதிகரித்து வரும் ஆதரவு மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications