லேடி போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் ஜோஸ்பின். இவர் பணியின் போது கிருஷ்ணகிரி நகரிலுள்ள பழையபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரமாக நின்றிருந்த இளைஞர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிகளை கேலியும், கிண்டலும் செய்துள்ளார். இதைக் கண்ட காவலர் ஜோஸ்பின் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தாராம்.
அங்கிருந்து செல்ல மறுத்த அந்த இளைஞர், பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை முத்தாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் என தெரியவந்தது.
இதனையடுத்து பெண் காவலர் ஜோஸ்பின் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்துள்ளனர்.