தமிழக காங். தலைவராகி ஓராண்டு நிறைவு... கே.எஸ்.அழகிரி செய்தது என்ன ?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில் அவர் கட்சியில் செய்த மாற்றங்கள் குறித்தும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேலிடம் ஆய்வு செய்ய உள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிய தருணத்தில் திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரியை அந்தப் பதவியில் நியமித்தார் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இரவு 10 மணிக்கு இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேனுகோபால். அப்போது அழகிரி என்றால் அவர் முகம் எப்படி இருக்கும் என்பது கூட பலருக்கும் தெரியாத நிலை இருந்தது. ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான இவர் அவரது ஆலோசனைகளின் படியே இன்றும் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் அதில் 8 இடங்களை கைப்பற்றி கட்சித் தலைமையின் பாராட்டை பெற்றார் அழகிரி. இதையடுத்து கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொண்டார். ஆனால் அதற்கு சக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரவர் ஆதரவாளர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என அனைத்து கோஷ்டிகளும் கோரிக்கை வைத்ததால் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை கைவிட்டார். கூட்டணிக் கட்சி விவகாரத்தில் சில அவசர முடிவுகள் காரணமாக தர்மசங்கடமான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்படும் வகையில் மாவட்டம் தோறும் குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். ஆனால் அதனை ஒரு சிலரை தவிர மற்ற யாரும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. பல இடங்களில் இவர் மேடையில் இருக்கும் போதே, இவர் கண் முன்பே அடிதடி களேபரங்கள் அரங்கேறியுள்ளன. உதாரணமாக அண்மையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அடிதடியை கூறலாம். மேலும், நாளுக்கு நாள் கோஷ்டிகள் அதிகமாவதை தடுக்க தனது சக்திக்கு மீறி முயற்சித்தும் கே.எஸ்.அழகிரியால் அதில் வெற்றி காணமுடியவில்லை.
காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட கே.எஸ்.அழகிரியிடம் தங்கள் தொகுதிக்கு செய்துள்ள பணிகளை பற்றி எதுவும் கூறுவதில்லை, சந்திப்பதும் இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே இது குறித்தெல்லாம் விசாரிப்பதுடன், கே.எஸ்.அழகிரி கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் காங்கிரஸ் தமிழக மேலிடப்பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் விரைவில் தமிழகம் வரவுள்ளார்.












Click it and Unblock the Notifications