விரைவில் கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் இந்தாண்டு இறுதியில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நடந்து வந்தது.
கடந்த ஜூன் மாதம் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் இரண்டு மாதங்களுக்கு மின் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கூறியபடி மீண்டும் இரண்டு மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டு டிசம்பரில் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தியை துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது உலைக்கான கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. முதல் மற்றும் 2-ம் கட்ட ஹைட்ராலிக் சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது.
எனவே, 2-வது உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால், அதில் மின் உற்பத்தி தொடங்க காலதாமதம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.