கூடங்குளம் அணு உலையிலிருந்து மூக்கை துளைக்கும் நாற்றம்- கலெக்டரை அணுகும் மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் இருந்து தொடர்ச்சியாக துர்நாற்றம் வீசிவருவதால் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் ஆதரவுடன் அணு உலைகள் நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வருகிறது. மக்களின் எதிர்ப்புக்களுக்கிடையில் செயல்பட்டு வரும் அணு உலையை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணு உலையிலிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மூக்கைத் துளைக்கும் துர்நாற்றத்தை அடுத்து இடிந்தகரை பகுதிமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சற்று தள்ளியுள்ள ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது.
அணு உலையிலிருந்து துர்நாற்றம் வீசுவது அங்கு மர்மமாய் ஏதோ நடப்பதாக கருதும் இப்பகுதிமக்கள் இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க முடிவெடுத்துள்ளனர்.