விஜயகாந்த் டெபாசிட்டை காலி செய்து மீண்டும் மா.செ.வான குமரகுரு!
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை டெபாசிட் இழக்கச் செய்து இழந்த மாவட்ட செயலர் பதவியை மீண்டும் பெற்றுள்ளார் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு.
2006-ம் ஆண்டு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலராக இருந்தவர் குமரகுரு. அப்போது திமுக அரசு நடத்திய செம்மொழி மாநாட்டுக்கு தம்முடைய கல்லூரி பேருந்துகளை அனுப்பினார்; அந்த மாநாட்டுக்கு தம்முடைய ஆதரவாளர்களின் பெயரில் வாழ்த்து தெரிவித்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் மா.செ. பதவி பறிபோனது.
அவருக்குப் பின்னர் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மோகனிடம் இந்த பதவி கொடுக்கப்பட்டது. அவரிடம் இருந்தும் பறிக்கப்பட்டு ரிஷிவந்தியம் ஒன்றிய செயலர் கதிர் தண்டபாணி விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலரானார்.
2 தொகுதியில்தான் வெற்றி
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கள்ளகுறிச்சியில் பிரபு, உளுந்தூர்பேட்டையில் குமரகுரு மட்டுமே வெற்றி பெற்றனர். திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி, சங்கராபுரத்தில் உதயசூரியன், ரிஷிவந்தியத்தில் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அபார வெற்றி பெற்ற பொன்முடி
ரிஷிவந்தியத்தில் போட்டியிட்ட மா.செ. 14,528 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சங்கராபுரத்தில் மோகன் 14,528; திருக்கோவிலூரில் 41,057 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் கோதண்டராமன் தோற்கடிக்கப்பட்டார். தொகுதி மாறியும் பொன்முடி இப்படி ஒரு லீடிங்கில் ஜெயித்தது எப்படி என அதிமுக மேலிடம் விசாரணையை முடுக்கிவிட்டது.
இதுதான் பஞ்சாயத்து
அப்போதுதான் மாவட்ட செயலர் கதிர் தண்டபாணிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு ஏழாம் பொருத்தம்; அவர் ரிஷிவந்தியம் தொகுதியில் தோற்க அதிமுகவினரும் காரணம் என்பதெல்லாம் தெரியவந்தது. அத்துடன் முன்னாள் அமைச்சர் மோகன், கதிர் தண்டபாணி இருவரும் கோஷ்டி அமைத்துக் கொண்டு முட்டிக் கொண்டதும் தெரியவந்தது.
மீண்டும் மா.செ.வான குமரகுரு
இதனால் இருவர் மீதும் கடும் கோபமடைந்த அதிமுக மேலிடம் புதிய மா.செ.வை தேடியது. அப்போதுதான் மா.செ.வாக இருந்த அனுபவம் உள்ளவரும் விஜயகாந்த்தை தோற்கடித்து டெபாசிட்டை இழக்கச் செய்தவருமான குமரகுருவை நியமிக்கலாம் என முடிவெடுத்தது. குமரகுருவுக்கான முதல் அசைமெண்ட்டே உள்ளாட்சித் தேர்தலில் அதிரடியைக் காட்டி திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதானாம்.
வெல்வாரா குமரகுரு?