எல்லாம் ஒரு வெளம்பரம்-சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய கும்பகோணம் இந்து முன்னணி செயலாளர் கைது!
கும்பகோணம்: கும்பகோணத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொந்த வீட்டில் தமக்கு தாமே பெட்ரோல் குண்டு வீசிய கும்பகோணம் இந்து முன்னணி மாநகர செயலாளர் சக்கரபாணியை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்து வரும் சக்கரபாணி, கடந்த 5 ஆண்டுகளாக இந்து முன்னணி என்ற இந்துத்துவா அமைப்பின் கும்பகோணம் மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு மாலதி என்ற மனைவியும் இனியன் என்ற மகனும் உள்ளார்.
பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை! சென்னை அருகே பயங்கரம்
பெட்ரோல் குண்டு வீச்சு
இன்று அதிகாலை தம்முடைய வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக சக்கரபாணி, போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதேபோல் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினருக்கும் சக்கரபாணி தகவல் கொடுத்தார்.
தொடர் சம்பவங்கள்
அண்மையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை இலக்கு வைத்து இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் கும்பகோணத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. சக்கரபாணியின் மேலக்காவேரி பகுதி வீட்டு சென்ற போலீசார், பெட்ரோல் வீசப்பட்ட பாட்டில் பகுதிகள், திரி ஆகியவற்றை கைப்பற்றினர். கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா மற்றும் பாஜக பிரமுகர்களும் சக்கரபாணி இல்லத்தில் குவிந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி சென்னையில் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர்
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கும்பகோண கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
நாடகம் அம்பலம்- இந்து முன்னணி பிரமுகர் கைது
இந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி மீது சந்தேகம் கொண்டு போலீசார் அவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தனர். அதில் ஒரு அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிவந்துள்ளது. 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து சக்கரபாணியை போலீசார் கைது செய்தனர் என்று தெரிவித்தனர். கடந்த காலங்களில் போலீஸ் பாதுகாப்பு, உட்கட்சி மோதல் உள்ளிட்ட காரணங்களால் இந்துத்துவா அமைப்பினர் தங்களுக்கு தாங்கே பெட்ரோல் குண்டு வீசுவது, செட்டப் அடியாட்கள் மூலம் தாக்குதல் நடத்துவது என நாடகமாடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.