அதிமுக 162; திமுக -41; பாமக-1 ; இழுபறி - 30 தொகுதிகள்: குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக 162 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதா குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளது என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு, மேற்கு மண்டலங்களில் உள்ள 119 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை வெளியிட்டது. இன்று வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டது. இதுவரை 234 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அப்புவிடம் திமுக வேட்பாளர் துரைமுருகன் தோல்வியடைவார் என்றும் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தோல்வியை சந்திப்பார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாகவும் குமுதம் ரிப்போர்ட்டர் கணித்துள்ளது.

விஜயகாந்த் தோல்வி
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தோல்வியடைவார் என்றும் அதிமுக வேட்பாளர் குமரகுரு வெற்றி பெறுவார் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

தோல்வியை சந்திக்கும் விஐபிக்கள்
பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.ஆர். சரஸ்வதி, திமுகவின் ஐ.கருணாநிதியிடம் தோல்வியடைவார் என்றும் ஆலந்தூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், திமுக வேட்பாளர் தா.மோ. அன்பரனிடம் தோல்வியடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசைக்கு 3வது இடம்
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் விருகை ரவி வெற்றி பெறுவார் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கணித்துள்ளது.

மயிலையில் டிஜிபி நடராஜ்
மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் டிஜிபி நடராஜ் வெற்றி பெறுவார் என்றும் கராத்தே தியாகராஜன் தோல்வியை சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பண்ருட்டி வேல்முருகன்
நெய்வேலி தொகுதியில் போட்டியிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகனுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் 3வது இடம் யாருக்கு என்பதில் பாமக வேட்பாளர் ஜெகனுக்கும், பண்ருட்டி வேல்முருகனுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. நெய்வேலியில் அதிமுக வெல்லும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கணித்துள்ளது.

இழுபறி தொகுதிகள்
இதுவரை பல ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. 50 முதல் 75 தொகுதிகள் வரை இழுபறி நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளன. குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பில் 30 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications