மேட்டூர் அணை ஜூன் 12ல் தண்ணீர் திறக்க முடியாது- 6 வது ஆண்டாக குறுவைசாகுபடியில்லை
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க முடியாது என்பதால் விவசாயிகளுக்கு ரூ.35 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி திறக்க முடியாத காரணத்தால் காவிரி டெல்டா குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.35 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடி செய்யப்படும்.இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் ஏறத்தாழ 1.10 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும்.
குறுவை சாகுபடி
கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப் படவில்லை. போர்வெல் வசதியுள்ள இடங்களில் மட்டும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.
வறண்ட அணை
கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்துப்போனது. மேட்டூர் அணை 100 அடியைக் கூட எட்டவில்லை. தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 30 அடிக்கும் குறைவாகவே உள்ளது. குடிநீருக்கு கூட குறைந்த அளவே வெளியேற்றப்படுகிறது.
மழை பெய்ய வேண்டும்
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து அதிகமாகி, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்துறை பொறியாளர்கள்.
மேட்டூர் அணை
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இப்போதுதான் மழை தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர சில வாரங்கள் ஆகும் அணை 90 அடியை எட்டினால் மட்டுமே திறக்கப்படும். எனவே இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறக்க முடியாத காரணத்தால் காவிரி டெல்டா குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.35 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 35 கோடி ஊக்கத்தொகை
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.