ராசா செய்த புரட்சி.. ஊட்டியில் குஷ்பு பிரசாரம்
ஊட்டி: செல்போன் சேவையில் முன்னாள் மத்திய தொலைத தொடர்புத் துறை அமைச்சர் ராசா பெரும் புரட்சியே செய்துள்ளார் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் ராசாவை ஆதரித்து குஷ்பு ஊட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை நீங்கள் வெற்றி பெற வைத்தால், இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார்.
கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்து, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்தார். ஆனால் தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிடப்பில் போட்டு உள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2 அல்லது 3 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது 14 மணி நேர மின்வெட்டு உள்ளது. மின்சார கட்டணமும் 3 மடங்கு உயர்ந்து விட்டது. மேலும் பால் விலை உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.
திருப்பூர் பகுதியில் மின்வெட்டு காரணமாக 25 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.
செல்போன் சேவையில் புரட்சி செய்து, சாதாரண பொதுமக்கள் கூட செல் போன் பயன்படுத்தும் நிலையை ஆ.ராசா உருவாக்கினார். தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
கருணாநிதி கைகாட்டும் நபரே இந்தியாவின் பிரதமராக வர முடியும். எனவே தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் குஷ்பு.