வெள்ள நிவாரணப் பணிகள் சரியாகவே நடக்கவில்லை - குஷ்பு குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பெரம்பூர், மேட்டுப்பாளையம், கோவிந்தன் தெரு, அருந்ததியர் நகர் ஆகிய பகுதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை கூட்டாகப் போய் பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துண்டு, சேலை மற்றும் போர்வைகளை வழங்கினர். பின்னர் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "காங்கிரஸ் கட்சி சார்பில் நல உதவி வழங்குவதற்காக போடப்பட்டிருந்த மேடையை ஆளுங்கட்சியினர் பறித்துக்கொண்டு விட்டார்கள். மற்றவர்களுக்கு செய்யும் உதவியை அரசு தடுக்க பார்க்கிறது. நடப்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்" என்றார்.
குஷ்பு பேசுகையில், "தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பணிகள் சரியாக நடக்கவில்லை. ரூபாய் 500 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார்கள். இது போதுமானது அல்ல. இதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.
முன்னதாக அதே பகுதியில் நிவாரண உதவிகள் வழங்குவதற்கு அ.தி.மு.க. சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரமுகர்களும், தொண்டர்களும் ஒரே இடத்தில் குவிந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications