இனி அவசரப்படமாட்டேன்: குஷ்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரதிய ஜனதாவில் அவர் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இனியொருமுறை அரசியல் கட்சியில் சேர அவசரப்படப் போவதில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்திற்கு திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளார் குஷ்பு.
கமல் ஆதரவு
இந்த திட்டத்தை நடிகர் கமலஹாசன் ஏற்கனவே ஆதரித்து உள்ளார். 90 லட்சம் பேரை இதில் சேர்ப்பேன் என்றும் தெரிவித்து உள்ளார். நடிகர் சூர்யாவும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
குஷ்பு ஆதரவு
தற்போது குஷ்புவும் ஆதரித்துள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து குஷ்பு பதிவு செய்துள்ள கருத்தில், இந்தியாவை தூய்மையாக வைத்து இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
சுத்தமாக வைப்போம்
வீட்டை முதலில் சுத்தமாக வைப்போம். குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.
|
மகத்தான திட்டம்
மேலும் அவர் கூறும் போது, ‘‘பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மகத்தானது. எல்லோரும் இதில் பங்கெடுத்து இந்தியாவை தூய்மைபடுத்த வேண்டும்'' என்றார்.
பாரதிய ஜனதா கட்சியில் சேருவீர்களா? என்று கேட்ட போது, ‘‘தி.மு.க.வில் நான் இப்போது இல்லை. பாரதிய ஜனதாவிலோ அல்லது வேறு கட்சியிலோ சேருவது பற்றி முடிவு எடுக்கவில்லை.
அவசரப்படமாட்டேன்
அரசியல் கட்சியில் சேர நான் அவசரப்பட மாட்டேன். கருத்து ஒற்றுமை இல்லாத கட்சியில் சேர்வதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே இருந்த கட்சியில் அப்படித்தான் நடந்தது'' என்றார்.
திமுகவில் குஷ்பு
தி.மு.க.வில் குஷ்பு நட்சத்திர பேச்சாளராக இருந்தார். தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார். கட்சி தலைமையை தேர்ந்தெடுப்பது குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதால் முன்னணி தலைவர்களின் கோபத்துக்கு ஆளானதால் அவரது வீட்டில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து கடந்த ஜூன் மாதம் வெளியேறினார்.
மோடி திட்டத்திற்கு ஆதரவு
தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஏதேனும் அரசியல் கட்சியொன்றில் விரைவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.