சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு... குவைத் அரசு அறிவிப்பால் நிம்மதி!
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
குவைத் : குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனால் பணி பெர்மிட் விசா இல்லாமல் தங்கி இருக்கும் இந்தியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வரை இவர்களிடம் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி அதிக அளவில் குவைத் செல்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் மக்கள் இங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 50 ஆயிரம் தெலுங்கு மக்கள் குவைத் நாட்டில் தங்குவதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. ஏஜென்ட்டுகள் மற்றும் குவைத்தில் உள்ள முதலாளிகளால் இவர்கள் விசா ஏமாற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடியுரிமை பெர்மிட்(அக்காமா) உள்ளிட்டவை இல்லாமல் குவைத்தில் தங்கி இருப்பவர்கள் சட்டவிரோத குடியேற்றத்தினர் என்று கருதப்படுகின்றனர், இவர்களுக்கு சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் மேற்கொண்டு குவைத்தில் தங்க முடியாது உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.
கடந்த 2 நாட்களாக நூற்றுக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பலர் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு அளித்துள்ளது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை அவர்களுக்கு தண்டனையோ அபராதமோ விதிக்கப்படாது என்றும் குவைத் அரசு கூறியுள்ளது.
இந்தியர்கள் குவைத் அரசு அளித்துள்ள பொதுமன்னிப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கல்ஃப் தெலங்கானா நல மற்றும் கலாச்சார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.