பஸ்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை - அக்கா, தங்கை கைது
சேலம்: சேலத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற திருச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகிலுள்ள கொலகொண்டம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது அத்தை சரஸ்வதி. இவர்கள் இருவரும் நேற்று காலை 10 மணியளவில் நாமக்கல்-சேலம் எஸ்.என்.பி என்ற தனியார் பேருந்தில் சேலம் வந்தனர்.

இந்த பேருந்து திருவாகவுண்டர் பை பாஸ் பகுதியில் 10.40 மணிக்கு வந்தபோது சரஸ்வதி கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. அப்போது சரஸ்வதியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரு பெண்கள், நின்றிருந்த ஒரு பெண் என மூவரும் திருவாகவுண்டனூர் நிறுத்தத்தில் இறங்க முற்பட்டுள்ளனர்.
அதில் ஒரு பெண்ணின் கையில் 10 பவுன் செயின் வைத்திருப்பதை பார்த்த பேருந்திலிருந்த ஒருவர் கூச்சல் போடவே பஸ் படிக்கட்டில் நகையை போட்டுவிட்டு மூவரும் கீழே இறங்கி தப்பி, எதிர்பக்க பேருந்து நிறுத்ததிற்கு சென்று அங்கிருந்த பேருந்தில் ஏறி வேகமாக சென்று விட்டனர்.
நகையை எடுத்து கொண்டு, சரஸ்வதியும், கிருஷ்ணமூர்த்தியும் பேருந்தை விட்டு கீழே இறங்கினர். அதன்பின் கிருஷ்ணமூர்த்தியும் அவரது உறவினர் சவுந்திரம் என்பவரும் பைக்கில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு, பஸ்சில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் நிற்பதை பார்த்ததும் அவர்கள் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் இருவர் வசமாக சிக்கி கொண்டனர். ஒருவர் தப்பினார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, இரு பெண்களையும், கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி டோல்கேட் பாலம் அருகே மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அக்கா, தங்கைகளான உஷா, பூவிதா என்பதும் இருவரும் சக்திவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications