ரூ.50 லட்சம் சொத்திற்காக... உயிருடன் இருக்கும் கணவனை “சர்டிபிகேட்”டில் கொன்ற மனைவி கைது!
சென்னை: சென்னையில் 50 லட்ச ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக சொந்த கணவனே இறந்து விட்டார் என்று சான்றிதழ் பெற்ற மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் தனது மனைவி, மகனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
அம்மனுவில், "சென்னை இரண்டாம் கட்டளை கிராமத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள சொத்து எனக்கு இருந்தது. எனது மனைவி டயானா கருத்து வேறுபாடு காரணமாக என்னை விட்டு பிரிந்து வாழ்ந்தார். எனது மகன் சாம்சன் நிர்மல்குமாரும் எனது மனைவியோடு சேர்ந்து கொண்டு, இரண்டாம் கட்டளை கிராமத்தில் இருந்த எனது சொத்தை எனக்கு தெரியாமல் விற்றுவிட்டனர்.
அந்த சொத்தை விற்பதற்காக உயிரோடு இருக்கும் நான் இறந்து விட்டதாக பொய்யான தகவலைச்சொல்லி எனது இறப்பு சான்றிதழை வாங்கி, சொத்து விற்பனைக்கு பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். புகார் கூறப்பட்ட டயானா மற்றும் சாம்சன் நிர்மல்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.