ஓயாமல் சண்டை போட்ட குழந்தைகள்- தொல்லை தாங்காமல் தீக்குளித்து தாயார் பலி!
அரியலூர்: அரியலூரில் குழந்தைகள் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டதால் அவர்களின் தாயார் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் போலீஸ் சரகம் இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. இவர்களுக்கு சுஜிதா என்ற மகளும், சூர்யா என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் சுஜிதாவும், சூர்யாவும் விளையாடும் போது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர். இதையடுத்து அவர்களை மகாலட்சுமி கண்டித்துள்ளார். இருப்பினும் 2 பேரும் சண்டையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த மகாலட்சுமி கணவர் சுதாகரிடம் கூறி குழந்தைகளைக் கண்டிக்குமாறு வற்புறுத்தினார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த மகாலட்சுமி உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதிர்ச்சியடைந்த சுதாகர், மனைவி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றார். இதில் இருவரும் உடல் கருகினர்.
உடனே அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மகாலட்சுமி இறந்தார். சுதாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.