வீட்டில் இருந்த பெண்ணைக் கொன்று நகை,பணம் கொள்ளை –திருச்சியில் விபரீதம்
திருச்சி: திருச்சியில் பெண்ணைக் கொன்று நகைகளைக் கொள்ளை அடித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் ஆபிசர் காலனியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் மத்திய பணைக்கலன் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். வைத்தியநாதன் வழக்கம்போல புதன்கிழமை காலை வேலைக்கு சென்றுவிட்டதால், இவரது மனைவி மேரி ரூபணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் மாலையில் வீட்டு பணியாளர் விஜயலட்சுமி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மேரி ரூபணி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து வீட்டு பணியாளர் விஜயலட்சுமி கூறுகையில், எப்போதும் வீடு பூட்டியிருக்கும். நான் வந்தபோது வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார் என்றார்.
போலீசார் இதுகுறித்து கூறுகையில் மேரி ரூபணி அணிந்திருந்த 20 பவுன் நகை காணவில்லை. ஆகையால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். மேரி ரூபணி உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.