கணவனின் கள்ளத்தொடர்பு – கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் ஊற்றிய மனைவி
சென்னை: சென்னையில் கணவனுடன் இருந்த கள்ளத்தொடர்பை துண்டிக்காததால், துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் மீது மனைவி ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காயத்திரி. அதே பகுதி துணிக்கடையில் விற்பனையாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளுக்கு முன், கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் காஞ்சிபுரத்தில் இருந்து திருவொற்றியூர் வந்தார். எதிர்வீட்டில் வசிப்பவர் சதீஷ்குமார். இவரது மனைவி மேகலா.
இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. எதிரெதிர் வீட்டில் வசிப்பதால் சதீஷ்குமாருக்கும், காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த விஷயம் மேகலாவுக்கு தெரிந்தது. அவர், கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும், சதீஷ்குமார் காயத்திரியுடன் இருந்த தொடர்பை நிறுத்தவில்லை.
பின்னர் காயத்திரியை சந்தித்த மேகலா தனது கணவருடன் உள்ள தொடர்பை நிறுத்திக் கொள்ளும்படி எச்சரித்தார். அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டனர்.
இவ்வாறு அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்தது. இந்நிலையில், நேற்று காலை கார்த்திகை தீப விழாவுக்காக சதீஷ்குமார் திருவண்ணாமலை சென்றுள்ளார்.
காலையில் காயத்திரிக்கும், மேகலாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்து வைத்தனர். மாலை 5 மணியளவில் காயத்திரி கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற மேகலா, எனது கணவனுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பை நிறுத்தி கொள் என கூறி திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மேகலா, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து காயத்ரி மீது ஊற்றினார்.
இதில் அவரது முகம், மார்பு, தோள் பட்டை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதை பார்த்ததும் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
மேகலா அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.தகவலறிந்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த காயத்திரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் மேகலாவைக் கைது செய்தனர்.