”என்னை தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்” – குழந்தையுடன் சிவகங்கை பெண் மனு!
சிவகங்கை: சிவகங்கையில் கணவர் கைவிட்டுச் சென்றதால் தானும், தன்னுடைய மகளும் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பெண் ஒருவர் அதிர்ச்சி மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசி. இவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில் அவர், "எனக்கும் திருப்பத்தூர் தாலுகா நா.கருங்குளத்தை சேர்ந்த சின்னையா என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் ஆனது. 6 மாதங்கள் குடும்பம் நடத்திய சின்னையா வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அப்போது கர்ப்பமாக இருந்த எனக்கு ஊனமான பெண் குழந்தை பிறந்தது. வெளிநாட்டுக்குச் சென்ற கணவர் அதன்பிறகு என்னுடன் பேசுவதை தவிர்த்தார். சொந்த ஊருக்கு வரும் போது என்னையும், குழந்தையையும் பார்க்க வரவில்லை.
எந்தவித உதவியும் கணவர் செய்யாத நிலையில் நான் தந்தை வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. எனக்கும் எனது மகளுக்கும் உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் மிகவும் வறுமையில் வாடுகிறோம்.
எனவே எனக்கும், எனது மகளுக்கும் வாழ வழி செய்ய வேண்டும். எனது திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப்பட்ட நகைகளை கணவரிடம் இருந்து திரும்ப பெற்றுத்தர வேண்டும். இல்லை என்றால் நானும் எனது மகளும் சாவதை தவிர வேறு வழியில்லை.
வாழ வழி செய்யாவிட்டாலும் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்காவது அனுமதிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். இம்மனு குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.