இலங்கையின் தொடர் அட்டகாசம்.. 7 காரைக்கால் மீனவர்கள் சிறை பிடிப்பு
காரைக்கால்: இலங்கையின் அட்டகாசம் மீண்டும் தொடர்கதையாகியுள்ளது. தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து தமிழக மீனவர்களைப் பிடித்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி மாவட்டம் காரைக்காலைச் சேர்ந்த 7 பேரை சிறை பிடித்துள்ளனர்.
சமீபத்தில்தான் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தனர் என்பது நினைவிருக்கலாம். அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையும் இலங்கைப் படையினர் விரட்டியடித்தனர். இந்த நிலையில் காரைக்காலைச் சேர்ந்த 7 மீனவர்களை பிடித்துச் சென்றுள்ளனர்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசாகுடி மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் காரை நகர் அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் 7 பேரையும் மற்றும் அவர்களது விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
இவர்களையும் சிறையில் அடைக்க இலங்கைக் கடற்படையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.