குட்கா விவகாரத்தில் பதிலளிக்க கால அவகாசம்... திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு?
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு விடுக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிகிறது.
சென்னை: சட்டசபையில் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் அளிக்க உரிமைக்குழுவிடம் அவகாசம் கோருவார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட களஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர்.

உரிமைக்குழு ஆலோசனை
இந்நிலையில் உரிமைக் குழு தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதிமுக தரப்பில் 7 உறுப்பினர்களும், திமுக தரப்பில் 5 உறுப்பினர்கள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பங்கேற்றனர். உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
இந்த கூட்ட முடிவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. ஆனால் இன்றுடன் உரிமைக்குழு அளித்த கெடு முடிகிறது.

எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
இந்நிலையில் உரிமைக்குழுவிற்கு பதிலளிக்க காலஅவகாசம் கோராலாமா அல்லது என்ன மாதிரியான பதில் அளிப்பது என்று மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட 21 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருப்பு?
ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் குட்கா விவகாரத்தில் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே நீதிமன்றத்தின் உத்தரவிற்காக திமுக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
உரிமைக் குழு நோட்டீஸ் மீது பதிலளிக்க திமுக கால அவகாசம் கேட்கிறது?












Click it and Unblock the Notifications