ஜெ. வழக்கில் கர்நாடக அரசின் அப்பீல்: சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறார் தமிழிசை
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து சட்டம் தன் கடமையை செய்யும் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து சட்டம் தன் கடமையை செய்யும். மேல்முறையீடு செய்ய வழி இருந்ததால் கர்நாடக அரசு அதை செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பின்னர் விடுவிக்கப்பட்டதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கர்நாடக அரசின் மேல்முறையீடு குறித்த தீர்ப்பு வந்தால் மக்களின் குழப்பம் தீரும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் போட்டியிடாததற்கு தோல்வி பயம் காரணம் அல்ல. எதுவும் நியாயமாக நடக்க வேண்டும். தேர்தலே நியாயமாக நடைபெறாதபோது தோல்வி மட்டும் எப்படி நியாயமாக இருக்க முடியும்.
இடைத்தேர்தல் எங்கு நடந்தாலும் மக்கள் அதை விரும்பவில்லை. ஆனால் அதிமுகவும், திமுகவும் மக்களுக்கு ஓட்டுக்கு பணத்தை அளித்து அவர்களை இடைத்தேர்தலுக்காக ஏங்க வைக்கின்றன என்றார்.