தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை கூடிப்போச்சு... சட்டம் ஒழுங்கு சரியில்லை: ஸ்டாலின்
சென்னை: ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொலைகள் அதிகரித்து வருகிறது என்று திமுக பொருளாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கொளத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, 6 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.5000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

மேலும் 6 பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, கடந்த இரு மாதத்தில் தினசரி கொலை, கொள்ளைகள் நடைபெற்று, சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டார். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications