காருக்குள் இறந்து கிடந்த விருதுநகர் வக்கீல் – கேஸ் கசிவுதான் காரணமா?
விருதுநகர்: விருதுநகரில் வக்கீல் ஒருவர் தனது காருக்குள் பிணமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கேஸ் கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் லட்சுமிநகர் சேரன் தெருவை சேர்ந்தவர் தலைமலை. மதுரையில் உள்ள சேமநல நிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்திரபிரகாஷ். மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார்.

வீட்டின் முன் தனது குளிர்சாதன வசதி கொண்ட காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே தூங்கி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் வீட்டினர் காரின் கதவை தட்டி திறக்குமாறு தெரிவித்த போதிலும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்து கார் கதவை உடைத்து பார்த்தபோது காருக்குள்ளேயே சந்திரபிரகாஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. காரில் உள்ள குளிர்சாதன எந்திரத்தில் இருந்து கேஸ் கசிந்து அதன் காரணமாக மூச்சுத்திணறி அவர் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து புகார் செய்யப்பட்டதன் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications