சென்னை: எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் படுகொலை- 2 பேர் கைது
சென்னை: சென்னையில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் நள்ளிரவில் வெட்டிக் படுகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நேற்று பரபரப்புடன் நடந்தது. தலைவர் பதவிக்கு சந்தன் பாபு மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். எழும்பூர் வக்கீல் சங்க தலைவர் பதவி ஒரு வருடமாக இருந்தது. இந்த வருடம் முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 948 ஓட்டுக்களில் 900 ஓட்டுக்கள் பதிவானது. மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இரவோடு இரவாக ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததால் முடிவை அறிவதற்காக நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் திரண்டு நின்றனர்.

இரவு 7 மணியளவில் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து கலைந்து சென்றார்கள்.
நள்ளிரவு 1 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டது. 386 வாக்குகள் பெற்று சந்தன்பாபு தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட மைக்கேலுக்கு 360 வாக்குகள் கிடைத்தது.
வெற்றி கொண்டாட்டம்
சந்தன்பாபு தலைவராக வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். சந்தன்பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். பட்டாசு வெடித்தனர்
மோதல், தாக்குதல்
அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. வெற்றி பெற்ற சந்தன் பாபுவை அவரது ஆதரவாளர்கள் தோளில் தூக்கியபடி ரோட்டுக்கு வந்தனர். அப்போதும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
வழக்கறிஞர் படுகாயம்
கல், இரும்பு கம்பி, கத்தி ஆகியவற்றால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டாலின் (38) என்ற வழக்கறிஞர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை பொதுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்க தேர்தலில் நடைபெற்ற மோதலில் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே வழக்கறிஞர் ஸ்டாலினை கொன்றவர்களை அடையாளம் காண போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை தொடர்பாக இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications