காவேரியில் குவிந்த தலைவர்கள்.. வா தலைவா என்று கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள்
Recommended Video
சென்னை: காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில் அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க தலைவர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.
தங்களது தலைவரின் இன்முகத்தைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டு எழுந்து வா தலைவா என்று குரல் எழுப்பியபடி காத்திருக்கின்றனர்.
காவேரி மருத்துவமனை உள்ள பகுதியே பெரும் சோகமாக காணப்படுகிறது. இரவிலும் கால் கடுக்க தொண்டர்கள் காத்துள்ளனர். ஒவ்வொருவரும் திமுக தலைவர் கருணாநிதி வந்து விடுவார் என்ற பெரும் நம்பிக்கையை சுமந்தபடி காத்திருக்கின்றனர்.
மறுபக்கம் தலைவர்களும் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். தேமுதிக இளைஞர் அணி தலைவர் சுதீஷ், பாஜக தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளனர்.
மத்திய அமைச்சர் நிதின் கத்காரியும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
கருணாநிதி சவாலை கடந்து வருவார் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்ற கருத்தையே மற்ற தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.