அதிமுக அணியில் இருந்து விலகல்- இடதுசாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் விலகுவதாகவும் இரு இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இடதுசாரிகளுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சித் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் இடதுசாரி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை முறியடிப்பதற்கு, தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிடுவதென முடிவு செய்தோம். இதற்காக நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் அஇஅதிமுகவின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் 40 தொகுதிகளுக்கும் அஇஅதிமுக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தனித்தே துவங்கிவிட்ட சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இடதுசாரிக் கட்சிகள் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications