3 எம்எல்ஏக்கள்... பத்து கோடி பற்றி நான் பேசலையே... வழக்கு போடுவேன் - சரவணன் எம்எல்ஏ
நடிகர் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரி பற்றி நான் எதுவுமே பேசவில்லை என்று சரவணன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா குரூப் 3 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் ரூ. 10 கோடி கொடுத்ததாகவும், அவர்கள் லக்கி எம்எல்ஏக்கள் என்று மதுரை தெற்கு அதிமுக எம்.எல்.ஏ. சரவணன் கூறியதாக வீடியோ ஒன்று தனியார் சேனலில் ஒளிபரப்பானது.
நடிகர் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரிதான் சரவணன் குறிப்பிடும் அந்த மூன்று பேர். இவர்களுக்கு மட்டும் தலா ரூ. 10 கோடி பணம் தரப்பட்டதாக கூறியதாக வீடியோவில் ஒளிபரப்பானது.
ஓபிஎஸ் அணி பற்றியும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து ஒபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சரவணனிடம் இது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ சரவணன் இன்று சந்தித்தார். அதிமுக எம்எல்ஏக்களை அணி சேர்க்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறியது குறித்து விளக்கம் அளித்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அது பழைய வீடியோங்க. அந்த வீடியோ படத்தில் உள்ளது நான்தான். ஆனால் அதில் உள்ள குரலை டப்பிங் பேசியுள்ளனர்.
பேரம் பேசியதாக வெளியான வீடியோ முற்றிலும் தவறானது. அதுவும், தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. ஏன் இந்த வீடியோவை இப்போது ஒளிபரப்பினார்கள் என்று தெரியவில்லை.
எங்களின் வழக்கறிஞருடன் வீடியோ பற்றிய உண்மை தன்மையை ஆராய்ந்து, நிபுணர்களுடன் கலந்து பேசி வழக்கு போட தீர்மானித்துள்ளேன் என்றும் எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.
கூவத்தூர் கூத்து தொடங்கி பண பேரம் வரை எம்எல்ஏ சரவணனின் செயல்பாடுகள் அனைத்தும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.