சென்னையில் லேகியம் சாப்பிட்டவர் மரணம் - விற்பனையாளரை அடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
உடல் எடையை குறைப்பதற்காக லேகியம் சாப்பிட்ட வாலிபர் மரணமடைந்தது தொடர்பாக லேகியம் விற்பனையாளரை பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
Recommended Video
சென்னை: ஆவடியில் உடல் எடைக்குறைப்பு லேகியம் சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக லேகியம் விற்பனையாளர்களை பிடித்து அடித்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். லேகியம் விற்ற வாகனத்திற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப், 28. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
லேகியம் வேலையை காட்ட தொடங்கியது. வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரிழந்தார்
உறவினர்கள் புகார்
லேகியம் சாப்பிட்டபிறகே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரதீப் உடலை பிரேத பரிசோதனை செய்து டாக்டர்கள் அறிக்கை அளித்தனர். இதனையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
லேகியம் விற்பனையாளர் தலைமறைவு
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரதீப் இறந்தது பற்றி தகவல் கிடைத்ததும் லேகியம் விற்றவர்கள் தலைமறைவானதாக தெரிகிறது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
வட மாநில லேகியம் விற்பனையாளரை போலீசார் தேடிவந்த நிலையில், அந்த பகுதியில் மீண்டும் லேகியம் விற்க கூடாரம் அமைத்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் உட்பட ஐவரை சுற்றி வளைத்த அயப்பாக்கம் பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பொது மக்களிடமிருந்து தப்பி ஓடிய அவர்களை திருமுல்லைவாயல் காவல்துறையினர் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
குடும்பத்தோடு விற்பனை
லேகிய வண்டியை அடித்து நொறுக்கியதோடு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயில் எரிந்த வாகனத்தை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இதனையடுத்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் மூவரிடம் நடத்திய விசாரணையில் லேகியம் விற்றவர்கள் மகாராஷ்ட்டிரா மாநிலத்தை சேர்ந்த முலாயங்சிங்,30 அவரது மனைவி சுந்தரி, அக்காள் பவித்ரா உள்ளிட்ட ஆறு பேர் என்பது தெரிய வந்துள்ளது.
பலியான சோகம்
சாலையோரங்களில் பாட்டில்களில் அடைத்து வைத்து லேகியம் விற்பனை செய்பவர்களிடம் அவசரத்திற்கு வாங்கி சாப்பிட்ட பிரதீப் உயிரிழந்த சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.