கமல் கட்சி தொடங்கியப் பின் கூட்டணி குறித்து முடிவு.. ஜெட் ஸ்பீடில் திருமாவளவன்!
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியப்பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலம்: நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியப்பின் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுகப் பகுதியை பார்வையிட்டார். களத்திற்கு வந்த பேச வேண்டும் என்று விமர்சித்தவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் தனது களப்பணியை துறைமுகத்தில் இருந்து இன்று தொடங்கினார் நடிகர் கமல்.
அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர். கமலின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சினிமாவில் முத்திரைப் பதித்தது போல அரசியலிலும் அவர் முத்திரை பதிக்க வாழ்த்துவதாக திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அரசியலுக்கு வருவதாக கமல்ஹாசன் வெளிப்படையாக அறிவித்துள்ளதை விசிக வரவேற்கிறது என்றார். கமல் கட்சி தொடங்கிய பிறகுதான் கொள்கை கோட்பாடுகள் அடிப்படையில் பிற கருத்துக்களை கூற முடியும் என்று கூறினார்.
மேலும் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் கமல்ஹாசன் கட்சி தொடங்கட்டும் பிறகு கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.