விடுதலைப்புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்: மதிமுக வழக்கறிஞர்கள் தீர்மானம்
சென்னை: விடுதலைப்புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. வழக்கறிஞர் மாநாடு இன்று காலை 10.00 மணி முதல் சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், ''சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வுகளை இந்தியாவின் மற்ற இடங்களிலும் நிறுவ வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு முதலேற்பு அதிகார வரம்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமான தீர்மானங்கள் பின்வருமாறு:
சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட புதிய பகுதிகளை சென்னை உயர் நீதிமன்ற நில அதிகார வரம்பில் கொண்டு வர வேண்டும். மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
வழக்கறிஞர் நல நிதியைத் தற்போதுள்ள ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 68 ஆகவும் உயர்த்த வேண்டும். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் குறுக்கிடும் தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
ஈழத்தமிழர்களின் நியாயமான உணர்வுகளைப் பிரதிபலித்து அவர்களுக்கு அரசியலில் சமஉரிமையையும் சுதந்திரமான வாழ்வும் அமைய தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அந்தச் சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப்புலிகள் போராடினார்கள்.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் மீதான தடை நியாயமற்றது. எனவே, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்போதும், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோதும் வழக்கறிஞர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து போராட்டத்துக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குரல் கொடுத்து வருகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வழக்கறிஞர்களுக்குத் தன்னுடைய ஆதரவை வழங்கி வரும் வைகோவுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications