வாப்பா 'மின்னல்... மழை எப்போ வரும்?... மதிமுக பிரமுகரை கலாய்த்த விஜயகாந்த்
நெல்லை: கலிங்கபட்டியில் உள்ள வைகோவின் வீட்டிற்குச் சென்றிருந்த விஜயகாந்த்... மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி என்பவரைப் பார்த்து மழை எப்போ வரும் என்று கேட்டதால் கலகலப்பு ஏற்பட்டது.
நெல்லை தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சங்கரன்கோவில் அடுத்த கலிங்கப்பட்டியில் உள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு கடந்த 2ந் தேதி சென்றார்.
அவரை வீட்டு வாசலில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், ரோஜாப்பூ மாலையணிவித்து வரவேற்றார். பின்னர் வைகோ, விஜயகாந்த் கையை கோர்த்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

அங்கு தாயார் மாரியம்மாள், மனைவி ரேணுகாதேவி, மகன் துரை வையாபுரி, குடும்பத்தினர், தென்காசி ம.தி.மு.க., வேட்பாளர் சதன் திருமலைக்குமார், அக்கட்சி மாநில இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தினார்.
வாப்பா மின்னல்
உடனே மின்னல் முகமது அலியின் கைகளை பற்றிக் கொண்ட விஜயகாந்த்... மின்னல் வந்துருச்சி... அடுத்து மழை எப்போ வரும் என்று சட்டென்று கேட்கவே... அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அந்த இடமே அப்போது கலகலப்பானது.

அதனைத்தொடர்ந்து, விஜயகாந்திற்கு சூடான தோசை, வடை, இருவகை சட்னி, அல்வா, முந்திரிபருப்பு பரிமாறப்பட்டது. சூடான காபி தரப்பட்டது. அதை அவர் ருசித்து சாப்பிட்டார்.
ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அங்கிருந்த விஜயகாந்த் வைகோ உடன் நட்பு பாராட்டி பேசியது தேமுதிக, மதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications