‛‛அனில் கும்ப்ளேவாக அண்ணாமலை’’.. கணித்த நாராயணன் திருப்பதி.. திமுகவில் 10 விக்கெட் விழுவது உறுதியாமே!
திருப்பூர்: திமுகவில் தற்போது வரை 3 விக்கெட் வீழ்ந்துள்ளது. அனில் கும்ப்ளே போல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவின் 10 விக்கெட்டுகளை அண்ணாமலை வீழ்த்துவார் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் - என் மக்கள்' என்ற பெயரில் கடந்த ஆண்டு யாத்திரையை தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் யாத்திரை சென்றார். இந்த யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மாதப்பூரில் இன்று நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார்.
மாதப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேவேளையில் அதிமுகவை அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதிமுவின் முன்னாள் முதல்வர்களான மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கழற்றிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுகவின் ஓட்டுகளை பாஜக நோக்கி ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி இப்படி பேசியுள்ளார்.
முன்னதாக அந்த பொதுக்கூட்டத்தில் பாஜவின் பல்வேறு தலைவர்கள் பேசினர். பாஜகவின் தமிழக துணை தலைவர் நாராயணன் திருப்பதியும் பேசினார். அப்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவுடன் ஒப்பிட்டு பேசினார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றிபெற வைத்திருப்பார்.
அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த நாராயணன் திருப்பதி, பாஜக தலைவர் அண்ணாமலை அனில் கும்ப்ளே போன்று திமுகவில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என கூறினார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி பேசியதாவது: தமிழ்நாட்டில் இன்றைய தினம் 3 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே கிரிக்கெட்டில் போட்டி நடக்கிறது. முதல் விக்கெட் என்பது அண்ணாமலை பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்தபோதே விழுந்தது. செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்றார். சிறைக்கு சென்றவர் இன்னும் வெளியே வரவில்லை.
அடுத்தது விழுப்புரத்தை சேர்ந்த இன்னொரு முக்கிய அமைச்சர். நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். சட்டசபையில் நம்முடைய ஆளுநர் ரவியை போயா.. போயா என சொன்னதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆளுநரை போயா.. போயா எனக்கூறியவரே இப்போது சட்டசபையில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் தான் பொன்முடி.
3வதாக நேற்று முன்தினம் ஐ பெரியசாமி. அவர் இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உள்ளாக திமுகவின் 10 விக்கெட்டுகள் கண்டிப்பாக விழும் என்ற நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக அனில் கும்ப்ளே போன்று அண்ணாமலை திமுகவின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்து மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் பாஜகவுக்கு கொடுப்பார் என நம்பிக்கை உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications