பிராந்தி பாட்டிலில் பூச்சி: வாங்கியவருக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையைச் சேர்ந்த ஜி.ரமேஷ் என்பவர் மாநில அரசு நடத்தும் மதுபான கடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிராந்தி வாங்கினார். பாட்டிலை திறந்து பார்த்தபோது அதில் பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பிராந்தியை தயாரித்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டுக்கு நோட்டீஸும் அனுப்பினார்.
ஆனால் ஒன்றும் நடக்காததால் அவர் சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தை அணுகினார். தாங்கள் சுகாதாரமான முறையில் தரமாக பிராந்தி தயாரித்து விற்பதாகவும், சீல் போட்ட பாட்டிலில் பூச்சி இறந்து கிடக்க வாய்ப்பே இல்லை என்றும் யுனைடெட் ஸ்ப்ரிட்ஸ் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. மேலும் ரமேஷ் அந்த பிராந்தியை குடிக்காததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்காது என்று அது தெரிவித்தது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ரமேஷுக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்குமாறு யுனைடெட் ஸ்ப்ரிட்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.