திருச்சி கிழக்கில் போட்டியா? திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுகிறதா? திருமாவளவன் விளக்கம்!
திருச்சி: தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விசிக, பவர் புல்லான இலாகா கேட்டு விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், திருச்சி கிழக்கில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக இன்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் தவெகவிற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி கிழக்கில் போட்டியா?
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கரூருக்கு முதல்வர் விஜய் செல்வது அவசியமானது. இடைத்தேர்தல் எதிலும் நான் போட்டியிட போவது இல்லை என்று நான் முதல் நாளிலேயே சொல்லிவிட்டேன். ஊடகங்கள் யூகங்களாக இதனை பரப்புகிறார்கள். தவெகவிற்கு எந்த ஒரு அழுத்தத்தையும் நாங்கள் தரவில்லை. இலாகாவை மாற்றி தாருங்கள் என்றும் நாங்கள் கேட்கவில்லை.
திருச்சி கிழக்கில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் வைக்கவில்லை. ஊடகங்களாக பரப்புகிற ஊகங்களாவே இவை இருக்கின்றன. விசிக அப்படி எந்த ஒரு அழுத்தத்தையும், தவெகவிற்கு தரவில்லை. அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி திமுக போராட்டம் நடத்தியது பற்றி கேட்கிறீர்கள். அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகலா?
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக இருப்பதாக செய்திகள் வெளியாவது பற்றி திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளிக்காமல் திருமாவளவன் மவுனமாக சென்று விட்டார். தவெக அரசில் இடம் பெற்றுள்ள விசிக, தவெக கூட்டணியில் இன்னும் இணையவில்லை என்று கூறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், நாங்கள் தற்போது திமுக கூட்டணியிலும் இல்லை. தவெக கூட்டணியிலும் இல்லை என்று கூறியிருந்தார்.
எனினும், வெக அமைச்சரவையில் விசிக இணைந்ததால் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறோம் என்றும் விசிக கூறி வந்தது. இந்த சூழலில், ஜூலை 1ஆம் தேதி தவெக மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஆகியோர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்து அழைப்பை வழங்கியிருந்தனர்.
ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அழைப்பு
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த பிற கட்சிகளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில்தான், திமுக கூட்டணியில் இருந்து விசிக அதிகாரப்பூர்வமாக விலக இருப்பதாக தகவல் வெளியானது. 2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக இரண்டு சட்டமன்ற தேர்தல், இரண்டு நாடாளுமன்ற தேர்தல் என மொத்தம் 4 தேர்தல்களை திமுக கூட்டணியில் அங்கம் வகித்து விசிக சந்தித்துள்ளது.















Click it and Unblock the Notifications