“மக்களே நீங்க பண்ணீங்க பாருங்க மிகப்பெரிய ஊழல்”.. தவெக அமைச்சர் விஜய் பாலாஜி சர்ச்சை பேச்சு
ஈரோடு: தவெக அமைச்சர் விஜய் பாலாஜி, "வாக்காளர்கள் வாங்க வேண்டிய இடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு, வாக்குச் சாவடியில் வேறு ஒருவருக்கு வாக்களித்து விட்டார்கள்.. அரசியல்வாதிகளை விட மக்களே மிகப்பெரிய ஊழல்வாதிகள்" எனப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம பந்தி விருந்து நடைபெற்றது. மேலும், தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. பவானி நகராட்சி மற்றும் ஜம்பை, தொட்டில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு வேட்டி, சட்டை, சேலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, "கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது ஆட்சியை அரியணையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்" எனப் பேசியுள்ளார்.
தவெக அமைச்சர்கள் பலரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத் குமார் முன்பு பகிர்ந்த வீடியோ ஒன்றின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெண் அமைச்சர்கள் கீர்த்தனா - ஜெகதீஸ்வரி இடையே அதிகாரப்போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அமைச்சர் விஜய் பாலாஜியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications