"குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மறுக்கும் பெற்றோர்.. காரணம் முந்தைய அரசின் ஊழல்!" ஸ்ரீதர் வேம்பு
சென்னை: தமிழகத்தில் தற்போது சுமார் 50 சதவீத பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள் என்றும் அரசுப் பள்ளிகளின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதே இதற்குக் காரணம் என்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆசிரியர் பணி நியமனத்தில் பெரியளவில் முறைகேடு நடப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
சர்வதேச அளவில் முக்கியமான ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சமீப காலமாகவே முந்தைய திமுக அரசை விமர்சித்துப் பதிவிட்டு வருகிறார். முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளி உரிமம் பெறுவதற்குக் கூட லஞ்சம் கேட்கப்பட்டதாக ஸ்ரீதர் வேம்பு சமீபத்தில் காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு
இதற்கிடையே இப்போது மீண்டும் அரசு பள்ளி விவகாரத்தில் முந்தைய ஆட்சியாளர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் இதற்கு பள்ளிகளின் தரம் குறைந்துள்ளதே காரணம் என்றும் ஸ்ரீதர் வேம்பு சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 50 சதவீதப் பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளின் தரம் மோசமடைந்ததே இதற்கு காரணம். ஏழை எளிய கிராமப்புறப் பெற்றோர்கள் கூட, அரசுப் பள்ளிகளின் தரம் மோசமாக இருப்பதால், தங்களால் இயலாத சூழலிலும் கடன் வாங்கித் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் நியமன ஊழல்
அரசுப் பள்ளிகளின் இந்த வீழ்ச்சிக்கு கடந்த கால ஆட்சியில் நிலவிய ஆசிரியர் நியமன ஊழல் தான் மிக முக்கியமான காரணம். தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனங்களில் பல ஆண்டுகளாகவே பெரிய அளவில் ஊழல் என்பது ஊரறிந்த ரகசியமாக இருந்து வந்துள்ளது. ஒரு ஆசிரியர் பணி நியமனத்தைப் பெறுவதற்கு, சுமார் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை லஞ்சமாக முன்னதாகவே செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததாக என்னிடம் சிலர் கூறினார்கள். இத்தகைய நியமன முறைகேடுகள் தகுதியான ஆசிரியர்கள் உள்ளே வருவதைத் தடுப்பதோடு, ஒட்டுமொத்த கல்வி முறையையும் சீர்குலைக்கிறது.
நான் அரசின் நிதியுதவி பெறும் பள்ளியில் படித்தவன் என்பதால் அரசுப் பள்ளி கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் இலவசத் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். அவற்றை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளோம். இருப்பினும், அரசுப் பள்ளிகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும்.
ஊக்குவிக்க வேண்டும்
அரசு பள்ளிகளில் இப்போதும் அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.. அவர்களை ஊக்குவித்து நாம் பலப்படுத்த வேண்டும். ஆசிரியர் நியமன முறையைச் சீரமைப்பதே அதன் தொடக்கமாக இருக்கும். மாநிலத்தில் சில இடங்களில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் மோசமாக இருக்கிறது. ஆனால், அதை சரி செய்வதற்கு முன்பு நியமனத்தில் இருக்கும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு தரமான இலவச கல்வி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டு தமிழக முதல்வரையும் டேக் செய்துள்ளார்.














Click it and Unblock the Notifications