குடும்ப அட்டைதாரர்களுக்கு லாரிகளில் ரேஷன் பொருட்கள்..ஆன் தி வேயில் நடந்த ரூ.200 கோடி மாயம்? என்னாச்சு
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய குளறுபடி இப்போது அம்பலமாகி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... அதாவது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வந்து சேர வேண்டிய ரேஷன் பொருட்கள், லாரிகளில் ஏற்றி செல்லப்படும்போதே மாயமாகிவிடுகிறதாம்.. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாம்.. இதை பற்றின தகவல்தான் வெளியாகி, அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் லட்சக்கணக்கானோர் நேரடியாக பலனை பெற்று வருகிறார்கள்.

லாரிகளில் ரேஷன் பொருட்கள்
இந்த பொருட்கள் அனைத்து ரேஷன்தாரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, விற்பனை கணக்கீடு இயந்திரங்களுடன் டிஜிட்டல் எடைக் கருவிகள் இணைக்கப்பட்டு முறையான விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளில் இந்த அளவுக்கு டிஜிட்டல் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டாலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும்போது, அங்கு துல்லியமான எடை போடும் முறை எதுவுமே பின்பற்றப்படுவதில்லையாம்.. அங்கிருக்கும் ஊழியர்கள் தங்களின் பதிவேடுகளில் தோராயமாக ஒரு மூட்டையின் எடை 50.65 கிலோ என்று குறித்துக் கொண்டு, அப்படியே லாரிகளில் ஏற்றி அனுப்பி விடுகிறார்களாம். இந்த மூட்டைகளும், லாரிகள் மூலம் பயணித்து ரேஷன் கடைகளுக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன.
அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு?
அதற்கு பிறகு, கடை ஊழியர்கள் அந்த மூட்டைகளை எடை போட்டு பார்த்தால், 50 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டிய மூட்டைகளில் வெறும் 47 முதல் 48 கிலோ வரையிலான பொருட்கள் மட்டுமே உள்ளதாம்.. லாரிகளில் கொண்டு வரப்படும்போதே, உணவுப் பொருட்கள் அதிகளவில் சிந்தி வீணகிவிடுவதாகவும், இதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த எடைக் குறைவுப் பிரச்சனையானது, ரேஷன் கடை பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை உண்டுபண்ணி வருகிறதாம். ஏனென்றால் குடோனிலிருந்து குறைவான எடையுடன் வரும் பொருட்களை வைத்துக்கொண்டு, கார்டுதாரர்களுக்கு துல்லியமான எடையில் பொருட்களை வழங்கும்போது பற்றாக்குறை ஏற்படுகிறது.
ரேஷன் ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை
இந்த பற்றாக்குறையை சமாளிக்க, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வராத பொதுமக்களின் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி, போலிப் பதிவுகள் மூலம் தங்களின் கணக்குகளைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள். இது கடை ஊழியர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.. , நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து பொருட்களை லாரிகளில் ஏற்றும்போதே ஒவ்வொரு மூட்டையையும் துல்லியமாக அளவிடக்கூடிய டிஜிட்டல் எடைத் தராசுகளை பயன்படுத்த வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைக்குமா,
இந்த மின்னணு எடைத் தராசுகளை அமைப்பதற்கு ஒரு கிடங்கிற்கு சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. லாரிகளில் பொருட்களை ஏற்றும்போதும், இறக்கும் போதும் எடையை டிஜிட்டல் முறையில் துல்லியமாகப் பதிவு செய்தால், விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், வருடந்தோறும் வீணாகும் ரூ.200 கோடி நஷ்டத்தையும் முழுமையாகத் தவிர்க்க முடியும் என்பதே இவர்களின் கருத்தாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, இந்த எடைக் குறைவுப் பிரச்சனை தங்களது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இது குறித்து மிக விரைவில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
பொதுமக்களின் வரிப்பணமும், உணவுப் பொருட்களும் இப்படி வீணாவதைத் தடுக்க அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...!!!












Click it and Unblock the Notifications