மதுவிலக்கு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசளிப்பு
கோவை: கோவையில் நேற்று காலை 6.30 மணிக்கு சுந்தரராபுரம் உழவர் சந்தையில் நடந்த மதுவிலக்கு மராத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தனித்தனிப் பிரிவாகவும், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் தனித்தனி பிரிவாகவும், 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவரையும் கொண்ட பொதுப்பிரிவு கொண்டவர்களாக மொத்தம் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக இதற்கான முயற்சியில் கோவை தடகள சங்க உறுப்பினர்களோடு இணைந்து நமது கோவை மாவட்டக் கழக இளைஞர் அணி, மாணவர் அணி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் எடுத்த முயற்சியின் காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார்கள்.
நேற்று காலை சரியாக 6.30 மணியளவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பொதுப்பிரிவையும், அதன் பிறகு 15 மீட்டர் இடைவெளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவையும், அடுத்த 15 நிமிடத்திற்கு பிறகு மாணவிகளுக்கான பிரிவையும், அதற்கு பிறகு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பிரிவையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஓடினார்.
ஒவ்வொரு பிரிவும் சுந்தரராபுரம் உழவர் சந்தையில் இருந்து தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட 5 கிலோ மீட்டர் தூரமான மதுக்கரை மார்க்கெட்டை வந்தடைந்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் அணிவித்து, ரொக்கப்பரிசளித்து, பாராட்டுச் சான்றிதழையும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் ஆர்.ஆர்.சி. சினேகலயா எச்.ஐ.வி பாதிப்போர் அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 7 பேர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். அந்த 7 பேரையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த பகுதியில் மாரத்தான் போட்டி நடந்தாலும் தொடர்ந்து கலந்து வருகின்ற 74 வயதான முன்னாள் இராணுவ வீரர் லெட்சுமணன் அவர்களையும் மேடைக்கு அழைத்து பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
மேலும் போட்டி நடந்த 5 கிலோ மீட்டர் தூரத்தையும் முழுமையாக ஓடிய உடல் ஊனமுற்ற பள்ளிச் சிறுவன் வெள்ளியங்கிரிக்கும் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கினார்.