தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறையில் மாற்றம்- புதிய சட்டத்திருத்தம்
சென்னை: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறையில் மாற்றம் செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்தார். புதிய மசோதா மூலம் இனிமேல் கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏற்கனவே சமீபத்தில் மாநகராட்சி மேயர்கள் தேர்வில் மற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஜூலை 21ஆம் தேதி, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, ஜூலை 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும் பதிலுரையும் நடைபெற்றது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன. கடந்த 24ஆம் தேதி சுற்றுலா மற்றும் கதர்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது.
இதையடுத்து நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று மீண்டும் பேரவை கூடியது. இன்று பேரவையில், போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இன்று காலை சட்டசபை தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர் தண்டாயுதபாணிக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது.
தமிழகத்தில் அக்டோபரில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை, உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான சட்ட முன்வடிவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, உள்ளாட்சி அமைப்புகளில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவித்தது. அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள் என்று சட்டத்தை திருத்தியது.
அதன்பின்னர், 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சி அமைப்பில் மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மேயர்களை மக்களே தேர்வு செய்தனர். இந்நிலையில், மீண்டும் மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை பொதுமக்கள் நேரடியாக தேர்வு செய்த முறையை மாற்றி, தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறைக்கான சட்டத்திருத்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்தது அதிமுக. இந்த மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே, திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றியது அதிமுக அரசு.
உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி என்பது வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்யும் முறை கடந்த தேர்தல் வரை நடைமுறையில் இருந்தது.
2006ம் ஆண்டு தலைவர் பதவியை பிடிக்க விரும்புபவர்கள் முதலில் வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அதன்பின் மற்ற வார்டுகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் ஆதரவு அளித்து ஓட்டுபோட்டு பெரும்பான்மை பெற்றால் மட்டுமே தலைவராக தேர்வு செய்யப்படும் நிலை இருந்தது.
இதனால் கவுன்சிலராக வெற்றி பெறுவதற்கு எடுத்த முயற்சியை விட கவுன்சிலர்களின் ஆதரவை பெற பலமடங்கு பிரயத்தனம் செய்ய வேண்டும். அவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பெட்டி பெட்டியாய் பணத்தை வைத்துக்கொண்டு "குதிரை பேரம்' நடத்துவது தவிர்க்க முடியாததாக இருந்தது.
வெற்றிபெற காரணமான கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு பணத்திற்காக மாற்று கட்சிக்கு ஓட்டுபோட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதனால் சில சமயங்களில் பெரும்பான்மை பெற்ற கட்சியை சேர்ந்த ஒருவர் தலைவர் பதவிக்கு வரமுடியாமல் போய்விடுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி மக்கள் மூலம் நேரடியாக ஓட்டுபோட்டு தேர்வு செய்யும் முறையை தேர்தல் ஆணையம் கடந்த 2011ம் ஆண்டு நடைமுறைபடுத்தியது. நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மக்களின் ஓட்டுகளை மட்டுமே நம்பி களம் இறங்கினர்.
அதேபோல் ஒரு வார்டில் உள்ள மக்களின் ஆதரவை மட்டுமே பெற்று கவுன்சிலராக வெற்றிபெற்று, அதன்பின் கவுன்சிலர்களுக்கு பணத்தை கொடுத்து தலைவராகும் முறைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இதனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே தலைவராக வெற்றிபெற முடியும் நிலை உருவானது. இதனால் குதிரை பேரம் ஒழிக்கப்பட்டது.
2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த நேரடி தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறையில் மாற்றம் செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்தார். புதிய மசோதா மூலம் இனிமேல் கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏற்கனவே சமீபத்தில் மாநகராட்சி மேயர்கள் தேர்வில் மற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் யாருமே இல்லாத நிலையில் மேயர், நகராட்சி தலைவர் தேர்வு செய்வதற்கான புதிய சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.