இடியாப்ப சிக்கலில் மதுரை அதிமுக வேட்பாளர்
மதுரை: மதுரை அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது போயஸ் கார்டனில் புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகின்றது.
எந்த நிகழ்வாக இருந்தாலும், மதுரை என்றாலே ஒரு அதிரடி புதிரடி இருந்தே தீர வேண்டும். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் அதிமுக வேட்பாளர்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்த கோபாலகிருஷ்ணனை மதுரை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது முதலே கோபாலகிருஷ்ணன் மீது போயஸ் கார்டனுக்கு புகார்கள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், அவர் மீது நில அபகரிப்பு புகார் மற்றும் வில்லங்கமான புகார்கள் எல்லாம் வரிசையாக கச்சை கட்டி நிற்கின்றதாம். இதை சற்றும் எதிர்பாராத கோபாலகிருஷ்ணன் ஆடிப் போய் உள்ளாராம். எனது எதிரிகள் இப்போது முதலே சதி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணணுக்கு முக்கிய இடத்தில் இருந்து கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் செய்தி வந்துள்ளதாம்.
ஆனால், இவை எல்லாம் கதைக்கு உதவாது, வேட்பாளரை மாற்றியே ஆக வேண்டும் என உள்ளூரில் சிலர் போயஸ்கார்டனுக்கு விடாது பேக்ஸ் மழை பொழிந்து வருகின்றார்களாம்.